Monday 6 May 2019

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஷீரடி சாய்பாபா

லியுகத்தின் கண்கண்ட தெய்வமாக எங்கெங்கும் வியாபித்திருந்து, அருள்மழை பொழிந்து வருகின்றார். அவர் எங்கு எப்போது பிறந்தார் என்பது யாருக்குமே தெரியாது. அவருடைய தோற்றம்தான் புதிராக இருந்தது என்றால், அவருடைய மொழிகளும், நடவடிக்கைகளும்கூட பல நேரங்களில் புதிராகவே இருந்திருப்பதை அவருடைய சத்சரிதத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அவர்தாம் மகாசமாதி அடையப்போகும் நாளைகூட இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே 1916-ம் ஆண்டு மற்றவர்களுக்கு உணர்த்தவே செய்தார். ஆனால், மற்றவர்கள் அதை உணரவில்லை. 1918-ம் ஆண்டு இதே விஜயதசமி நாளில்தான் சாய்பாபா மகா சமாதி அடைந்தார். அவர் மகா சமாதி அடைந்த 100-வது ஆண்டு இன்று விஜயதசமியன்று தொடங்குகிறது.
சாய்பாபா
தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும், தாம் அளவற்ற ஆற்றலுடன் தம் பக்தர்களுக்கு அருள்புரிவேன் என்று தாம் கொடுத்த உறுதிமொழியின்படி இன்றும் தம்மைச் சரணடைந்தவர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். அவர் தம்முடைய ஜீவித காலத்தில் நடத்திய சில அருளாடல்களை இங்கே பார்ப்போம்.
தண்ணீரில் விளக்கேற்றிய தயாபரன்!
ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் மசூதியில் தீபம் ஏற்றுவது பாபாவின் வழக்கம். அதற்காக தினமும் கடைத்தெருவிற்குச்  சென்று வியாபாரிகளிடம் எண்ணெய் வாங்கி தீபம் ஏற்றுவார். சிலநாள்கள் இப்படியே சென்றன. ஒருநாள் கடைக்காரர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவு செய்தனர். அதன்படி இனி யாரும் பாபாவுக்கு எண்ணெய் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்தனர். பாபாவுக்குக் கொடுக்கும் எண்ணெய்க்குக் காசு வராது என்பதால்தான் அந்த முடிவுக்கு வந்தனர்.
இதை அறிந்த மகான் அவர்களுக்கு ஞானம் வழங்க விரும்பினார். எனவே, அவர் அந்த எண்ணெய் வியாபாரிகளிடம் சென்று எண்ணெய் கேட்டார். ஆனால், அவர்கள் யாரும் எண்ணெய் தர முன்வரவில்லை.
சாய்பாபா
அனைத்தும் அறிந்த சாயிநாதர் எதுவும் பேசாமல் தன் மசூதிக்குச் சென்றார். அவர் என்ன செய்கிறார் என்பதைக் காண எண்ணெய் வியாபாரிகள் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். பாபா எண்ணெய் டப்பாவை கையில் எடுத்து, அதில் சிறிது நீர் ஊற்றினார். அதைத் தன் வாயில் ஊற்றி பின்னர் அந்த நீரை மறுபடியும் எண்ணெய் டப்பாவில் நிரப்பி, அதைத் தீபங்களில் ஊற்றினார். அவரைச் சாதாரண மானிடர் என்று அதுவரை எண்ணியிருந்த வியாபாரிகள் அதிசயிக்கும் வகையில் தீபங்கள் எரியத் தொடங்கின.
இதைக் கண்ட வியாபாரிகள் அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். இவ்வாறு பாபா அவருக்கு ஞானம் வழங்கி ஆசி கூறினார். மேலும் என்றும், எவரிடத்தும் பொய் கூறக் கூடாது என்றும், எப்போதும் பொருளாசை இருக்கக் கூடாது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment