Wednesday 31 July 2019

பாபாவின் மிகவும் விசேஷமான சக்திகள் கொண்ட ஆலயம்




பாபாவை, குறிப்பிட்ட ஆலயத்தில் மட்டுமே மிகவும் விசேஷமான சக்திகள் கொண்டவராக உருவகப்படுத்துவது, மேலும் பக்தர்களின் பிரார்த்தனைகளை பாபாவிடம் எடுத்துக்கூறும் பிரதிநிதிகள் போன்ற மனப்போக்கில்  பலர் ஈடுபடுகிறார்கள். உண்மை அதுவல்ல, எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லோருடைய வேண்டுதல்களும், துயரங்களுக்கும் பாபா செவிசாய்க்கிறார். பக்தர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாபா தமது பக்தர்களை தமது சொந்தக் குழந்தைகள், சிசுக்கள் போலவே நேசித்தார், நேசித்தும் வருகிறார்.
ஒருசமயம், பாபா  ஒரு குழந்தையைச் சுட்டிக் காட்டி, " இக் குழந்தை தூங்கும் போது நாம் அருகிலிருக்க வேண்டும். விழித்திருந்து, கவனித்து, சிரமம் ஏற்கவேண்டும் " எனக் கூறினார். பக்தர்களின்பால் பாபாவின் அக்கறை அத்தகையது. எப்போதுமே பாபா, தமது பக்தர்களின் பின்னாலேயே இருந்து பக்தர்களை தாங்கி வருகிறார். இதுவே உண்மை. இதில் முழுநம்பிக்கை கொள்ளுங்கள். இந்த உண்மையை கிரகித்து கொள்ளும்போது உங்களது மனதில் அச்சம், கவலை எதுவுமில்லாமல் போகும்.
  
  " நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன    கொம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும்,  வெளிதேசங்களிலும் எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின்  எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."  

Tuesday 30 July 2019

உங்களுக்கு நலம் உண்டாகட்டும்


பாபா, தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்? [உறவினர்களின் பிரிவு, இழப்பு போன்றவை]

  உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை. இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை (குழந்தை பிறப்பது, உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான,
பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா? இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார். அது  ஒழுங்கின்மை, குழப்பம் விளைவிக்கும்.

அப்படி என்றால், ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்" என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் "உனக்கு வேலை கிடைக்கும்" என சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை 
கிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன. நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது. என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு, என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன;
ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன். 

Monday 29 July 2019

பாபாவே எல்லா தெய்வங்களின் அம்சம்




தீவிரமான கணபதி பக்தை ஒருத்தி இருந்தாள்.  அவள் தீராத  தலைவலியால் அவதிப்பட்டு வந்தாள்.  எத்தனை மருத்துவம் பார்த்தும் அவளது தலைவலி நோய் தீரவில்லை.

அவள் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு, ஒருநாள் பாபாவிடம் ஓடோடிவந்து, "பாபா! மருத்துவம் என் தலைக் குடைச்சலோடு தோற்றுவிட்டது.  தாங்கள்தான் மாமருந்து !  தாங்களே கருணை புரியவேண்டும்!" என்று வேண்டினாள்.

பாபா கருணையுடன் அவளுக்கு தன் கரங்களால் உதியை அள்ளிக் கொடுத்தார்.  உதியை வாங்கி தலையில் அணிந்து கொண்ட மறுநிமிடமே அவள் தலைவலி பறந்துவிட்டது.

பாபாவிடம் கண்ணீர்மல்க கைகூப்பி அவள் நன்றி சொன்னபோது, பாபாவோ , "அம்மா ! நீ கொடுத்த எத்தனை நைவேத்யங்களைத் தினமும் தொந்தி புடைக்க உண்டிருக்கிறேன் !  உனக்காக இதுகூட செய்யமாட்டேனா?" என்றார் அன்புடன்.

"பாபா !  நான் தங்களை முதன்முறையாக இப்போதுதான்  பார்க்கிறேன்.  அப்படியிருக்க, தொந்தி புடைக்க எப்படி தினமும் நைவேத்யம் தந்திருக்க முடியும்?" என்று கேட்டாள்.

அதற்கு பாபா , "அம்மா!  உள்ளன்புடன் நீ பூஜிப்பது கணபதியாக, சிவனாக, சத்தியநாராயணனாக இருந்தாலும் அது என்னையே வழிபட்டதாகும் !" என்றார்.

Saturday 27 July 2019

பாபாவின் அருளால் நிச்சயமாக நல்லதே நடக்கும்


சுலோச்சனா கல்லூரி மாணவி.  வித்யா நகரில் பெற்றோரோடு வசித்து வந்தார்.  அவரது தந்தை ஒரு பர்லாங் தூரம் நடந்தால் கூட கால்கள் வீங்கிக் கொள்ளும்.  இந்த நோயினால் அவர் பெரிதும் துன்பப்பட்டார்.   ஹோமியோபதி, ‌அலோபதி என எல்லாவிதமான வைத்தியம் பார்த்தும் எந்தவொரு பயனும் தரவில்லை.

ஒரு வியாழக்கிழமை பரத்வாஜா சுவாமிகளின் சாயிபாபா பஜனையில் கலந்து கொள்ளச் சென்ற  வித்யாவின் தாயார்,  தனது கணவருக்கு இருக்கும் நோயைப் பற்றிக் கூறி மிகவும் வருத்தப்பட்டார். 

அதைக் கேட்ட பரத்வாஜர்,  "அம்மா !  தாங்கள் ஏற்கனவே தங்கள் வீட்டிலிருந்த பழைய சாயிபாபா படம் ஒன்றை சினேகிதரிடம் கொடுத்து விட்டதாகக் கூறியிருந்தீர்கள்!  அது ஞாபகமிருக்கிறதா?  முடிந்தால் அவருக்கு புதியதாக பாபா படம் ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு , நீங்கள் கொடுத்த அதே பழைய பாபாவின் படத்தை திருப்பி வாங்கி,  வீட்டில் பாபா இருந்த பழைய இடத்திலேயே அந்த படத்தை மாட்டி பூஜை செய்து வாருங்கள்.  சாயி சரித்திரத்தையும் தினமும் பாராயணம் செய்து பாருங்கள்.  பாபாவின் அருளால் நிச்சயமாக நல்லதே நடக்கும்  !" என்றார்.

உடனடியாக சுலோச்சனாவும் அவரது தாயாரும் பாபாவின் புதிய படமொன்றை வாங்கி அந்த நண்பருக்கு கொடுத்துவிட்டு, "பழைய பாபாவின் படத்தை திருப்பி வாங்கி வந்து வீட்டில் ஏற்கனவே இருந்த அதே இடத்தில் மாட்டி பூஜை செய்ய ஆரம்பித்தார்கள்."

சுலோச்சனாவின் தந்தை அதுபற்றிக் கேட்க,  "அப்பா !  பாபா எத்தனையோ பேரின் வியாதிகளை தனது அருட்பார்வையினாலே குணப்படுத்திய மகான்.  அவரின் பாதம் பணிந்து சத்சரித்திரம் படித்து அவரை வேண்டிக் கொள்ளாவிட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான்!" என்றாள் வித்யா.

அவரும், "சரி அம்மா! உனக்காக பாபாவிடம் பிரார்த்தனை செய்கிறேன்.  சத்சரித்திரமும் படிக்கிறேன்.  கால்வலி தீர்ந்துவிட்டால் ஷீரடிக்கு போகலாம் !"  என்றார்.  என்ன ஆச்சர்யம்!  படிப்படியாய் கால்வலி குணமாகி, ஒரே மாதத்தில் முற்றிலுமாக தீர்வு கிடைத்தது.  ஒரு பர்லாங் என்ன,  ஒரு கிலோமீட்டர் நடந்தாலும் கால்கள் வீங்கவில்லை. 

பாபாவின் அற்புதத்தை நினைவுகூர்ந்து வேண்டிக் கொண்டபடி குடும்பத்தோடு ஷீரடிக்குச் சென்று பாபாவிடம் நன்றிக்கடனை சமர்ப்பித்தனர்.  அதன்பிறகு வியாழக்கிழமை மட்டுமல்ல, நாள் தவறாமல் வீட்டில் பாபாவை பூஜித்தனர்.

Wednesday 24 July 2019

குரு பூர்ணிமாவில் குருநாமம் !!


saibaba க்கான பட முடிவு

உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வத்தின் மீது ஆசை. அழியக் கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே, பல பாடுகள் பட்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் அழியாத சொத்தான ஞானத்தை நமக்கு அளிக்க வேண்டுமென்றால், அது யாரால் முடியும்? குருவால் மட்டும்தான் முடியும். குரு வெளியில் உலகத்தினருக்குப் ஏழையாக, எளியவராக, சிறியவராக, பித்தனாக, தெரியலாம். ஆனால் குருவிடம் இருப்பதோ எப்போதும், யாராலும் அழிக்க முடியாத, அள்ள அள்ளக் குறையாத, ஆனந்தமயமான பேரின்பமாகிய ஞானப் பொக்கிஷம்.

எந்த விதமான காரணமும் இல்லாமல், எந்த விதமான பிரதியுபகாரங்களையும் எதிர்பாராமல், வெறும் கருணையினால் மட்டுமே, நமக்கு ஞானச் செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு , எமது அக வாழ்விற்கு வழிகாட்டி, தன்னையுணர வழிசெய்த அந்த தியாகத்தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கூடியத் திருநாளே குருபூர்ணிமா. இவ்வாறான குரு பூர்ணிமா தினமாகிய வைகாசிப் பூரணை தினத்தில் ஒரு குருநாதரின் பாதங்களின் அருகில் இருப்பதே பூர்வ ஜென்ம புண்ணியமாகும்.

எனவே இவ்வாறான சிறப்பம்சங்கள் பொருந்திய, பூரணை தினத்தில், சர்வ வல்லமை பொருந்திய சப்தரிஷிகள் ஒன்று கூடும் தினத்தில், குரு பூர்ணிமா தினத்தில், குருவினை எண்ணியிருந்தாலே கோடி புண்ணியம், குரு நாமம் ஜெபித்தாலே வினைகள் எல்லாம் தீரும். அவ்வாறெனின், குருவினை சரணடைந்து, குருவுடனிருந்து தியான ஜெபங்களில் ஈடுபட்டு, குருவினால் ஆசீர்வதிக்கப்பட்டு, குரு உபதேசம் கேட்டு, குவினால் வழங்கப்படும் அன்னப் பிரசாதத்தினை உண்ன வாய்ப்புக் கிட்டுமெனின், அது சர்வநிற்சயமாக பூர்வ ஜென்ம புண்ணியங்களின் பலனேயாகும்.

Monday 15 July 2019

மங்களங்கள் உண்டாகும்




பாபா கடுமையும் கண்டிப்பும் மிகுந்தவராக துவக்கத்தில் தோன்றலாம். ஆயினும்,  அவருடைய அன்பு லாபம் எதையும் எதிர்பார்க்காதது.

பொறுமையாகவும் தைரியமாகவும் பாபாவிடம் உறவைத் தொடர்ந்தால் நமக்கு மங்களங்கள் உண்டாகும்.

சாபங்களும்,  தாபங்களும்,  சுயநல நோக்கத்துடன் ஏற்படும் ஆசாபாசங்களும், பாபாவின் ஸத்சங்க நிழலில் நாம் புகும்போது ஒவ்வொன்றாக மறைந்துவிடும். இதன் பொருட்டு நாம் பாபாவின் பாதங்களை வணங்க வேண்டும்.

அஹந்தையை விடுத்து விநயத்துடன் பாபாவை சரணாகதி அடைய வேண்டும். நம் மனத்தில் புதைந்து கிடக்கும் ரகசிய விருப்பத்தைப் பிரார்த்தனையாக அவரிடம் வெளிப்படுத்த வேண்டும்.  பாபா நம்முடைய மனதிற்கு பெரும் திருப்தி அளிப்பார்.

அற்பஞானம் விளைவிக்கும் அகந்தையால் சிலர் ஆரம்ப காலத்தில் பாபாவின் திருவாய்மொழியை மனக்கோணலுடன் அணுகி நஷ்டத்திற்கு ஆளாவார்கள்‌. ஆயினும்,  பின்னர் நம்பிக்கையான விசுவாசம் ஏற்பட்டால் அவர்களுக்கு மங்களங்கள் விளையும்.

பாபாவின் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொள்பவர் தூயவரானாலும் சரி,  கபடரானாலும் சரி கடைசியில் கரையற்றப்படுவார் என்பது உறுதி.   பாபாவின் ஆற்றல் அளவிடற்கரியது.

Saturday 13 July 2019

ஸ்ரீ சாய் சத்சரித்திரம்


Image result for sai satcharitra


குரு வழிபாடு என்பது தானாக நிகழ்வது அல்ல. ஏதோ இந்த பிறப்பில் நடந்தது என்றும் கூற முடியாது. பல ஜென்ம தேடல், பூர்வ புண்ணியங்களின் குவியல்கள் மூட்டை மூட்டையாக இருந்தவருக்கே அது வாய்க்கும். அப்படிப்பட்ட குருபக்தியை மேலும் வலுப்படுத்த மிகச்சிறந்த சாதனை யாதெனில், குருவின் சரிதத்தை தினமும் பாராயணம் செய்வது. பாபாவின் மீது அதீத அன்பு கொள்ளும் பக்தர்கள், தினமும் ஒரு அத்தியாயம் , அல்லது ஒரு பக்கம், அல்லது ஒரு வரியாவது ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்.. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படிக்க கீழே உள்ள லிங்க்'ஐ  க்ளிக் செய்யவும். 

https://drive.google.com/folderview?id=0B7G8udmBMXCMMzliMmU2NTEtOGM1OS00YzgwLWE5NjEtODA0YzE4NDM4MDAw&usp=sharing


எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபா(BHA)வத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கிறாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது. சாயி அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார். உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார். அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை. கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.

Friday 12 July 2019

உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும்




பாபா, தனது பூதவுடலை விட்டு பிரியம்போது கூட பட்டினியாய் இருந்த தனது பக்தர்களை வாடாவிற்கு சென்று உணவு உண்ணும்படி கூறினார். பாபா என்ற தெய்வீக அவதாரத்திற்கு தனக்காக பக்தர்கள் விரதம் இருப்பதில் விருப்பமில்லை. இதுவே தாயன்பு. தாயும் நீயே, தந்தையும் நீயே, உறவும் நீயே, நட்பும் நீயே என்று பாபாவிற்கு தினமும் ஆரத்தி பாடுகிறோம். அவரே நமக்கு எல்லாம் என்று ஆனபின் அவர்மீது நமது பக்தியை மெய்ப்பிக்க உடலை வருத்தி விரதம் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், சாயி சாயி என்று தனது பக்தன் கூறும்போது தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், சாயி என்று அழைத்தவுடனே ஷிரிடியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தனது பக்தன் முன் தோன்றி அவனை காப்பாற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார். சாதனைகளிலேயே மிகவும் எளியதும் மிக சிறந்ததுமானது சாயி நாமத்தை உச்சரிப்பதே ஆகும். ஆகவே சாயி பக்தர்கள் தினமும் குறைந்தது ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி, உங்களுக்கு பிடித்த சாயி நாமத்தை ( ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி, அல்லது ஓம் சாயிராம் அல்லது சாயி சாயி அல்லது ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமஹ ஜெய ஜெய சாயி நமோ நமஹ ) சொல்லுங்கள். சாயிபாபா என்ற தெய்வத்தின் மகிமையை வார்த்தைகளால் எவராலும் விவரிக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அத்தகைய அனுபவத்தை பெற தினமும் பத்து நிமிடம் சாய் நாமத்தை சொல்லிவாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். நம்பிக்கையோடோ, நம்பிக்கை இல்லாமல் கூட சொல்லுங்கள். சாயி நாமம் எல்லா நல்ல மாற்றங்களையும்  அளித்து சாயியின் மீது அதீத பக்தி உடையவராக உங்களை ஆக்கும். 

"தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்."

Wednesday 10 July 2019

காப்பாற்றுங்கள் பாபா, எங்களை உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்



முதல் உலகப் போர் நடந்த சமயம்.... இந்திய கடற்படை தளபதியாக இருந்த கைகன்சிரி தருவாலாவும் போரில் பங்கேற்றார்.

அவருடன் சென்ற கப்பல்கள் அனைத்தையும் எதிரி நாட்டு விமானங்கள் குண்டு வீசி அழித்து கடலில் மூழ்க செய்து விட்டன. அடுத்து தன் கப்பல் மீதும் குண்டு வீசப்படும் என்று தருவாலாவுக்கு தெரிய வந்தது. அந்த கப்பலில் இருந்த அனைவரும் மரண பீதியில் அழுதனர். ஆனால் தருவாலா மனம் கலங்கவில்லை. சாய்நாதரை கண் கண்ட தெய்வமாக வழிபட்டு வந்த அவர் நம்பிக்கையோடு பாபா படத்தை தன் சட்டைப் பையில் இருந்து எடுத்தார். 

பாபாவின் கண்களை உன்னிப்பாகப் பார்த்தப்படி, ‘‘எங்களை உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். காப்பாற்றுங்கள் பாபா. தொலைவில் இருந்தாலும் பாபா நம்மை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்’’ என்று நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரடி மசூதியில் அப்போது பக்தர்களிடம் பேசிக் கொண்டிருந்த சாய்பாபா திடீரென அலறியபடி கீழே விழுந்தார். அனைவரும் ஓடோடி வந்து பாபாவை தூக்கினார்கள். 

பாபா சட்டையில் இருந்து தண்ணீர் வழிந்தது. அவர் தலை, உடல் அனைத்தும் தொப்பலாக நனைந்திருந்தது. ஏதோ தண்ணீருக்குள் மூழ்கி எழுந்தவர் போல பாபா காணப்பட்டார். அவர் இருந்த இடத்தில் தண்ணீர் வழிந்தோடி சிறு குளம் போல தேங்கி விட்டது. இதைப் பார்த்து பக்தர்கள் எல்லாரும் ஆச்சரியம் அடைந்தனர். ‘‘என்ன நடந்தது. பாபா’’ என்று கேட்டார். 

அப்போது ‘‘அவர் 3 கப்பல்களையும் காப்பாற்றி விட்டேன்’’ என்றார். வேறு எதுவும் அவர் சொல்லவில்லை. இதனால் சீரடியில் இருந்த யாருக்கும் அவர் சொன்னது புரியவில்லை. 

3 நாள் கழித்து மசூதிக்கு ஒரு தந்தி வந்தது. தளபதி தருவாலா அதை அனுப்பியிருந்தார். ‘‘பாபா உங்கள் அருளால் 3 கப்பல்களில் இருந்த நாங்கள் குண்டு வீச்சில் சிக்காமல் தப்பி விட்டோம். உங்களுக்கு கோடான கோடி நன்றி’’ என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அதன் பிறகே தொலை தூரத்தில் கடலுக்குள் தளபதி தருவாலாவை பாபா காப்பாற்றி இருப்பது மற்றவர்களுக்கு தெரிய வந்தது. எத்தனை மைல் தொலைவில் இருந்தாலும் பாபா நம்மை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார் என்பதை இந்த அற்புதம் உறுதிபடுத்தியது.

Tuesday 9 July 2019

சாயி தன் பக்தர்களை வருத்தப்பட விடமாட்டார்




தோபேஸ்வரைச் சேர்ந்த காகாமஹாராஜ் புகழ்பெற்ற மகான்.  அவர் ஒருமுறை பூனாவுக்குச் சென்றிருந்தபோது, அவரைக் காணவும்,  ஆசீர்வாதம் பெறவும் பக்தர்கள் பெருந்திரளாகக் கூடினர்.  
மகான் காகாமஹாராஜைக் காணும் ஆர்வத்தில் கூடிய கூட்டத்தில் எச்.வி. ஸாதே எனும் ஸாயி பக்தரும் ஒருவர். 

ஒவ்வொருவரும் மஹாராஜை தங்களின் இல்லத்திற்கு பிட்சைக்கு அழைத்தனர்.  பிட்சைக்கு அழைத்த பக்தர்களின் பலரின் அழைப்பையும் மஹாராஜ் அவர்கள் தட்டிக் கழித்தார்.  ஸாதேயும் தன் பங்குக்கு மஹாராஜை அழைக்க,  அவரின் அழைப்பும் மறுக்கப்பட்டது.  இது ஸாதேவுத்கு பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்தது.

அன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் ஒரு சீடன் ஸாதேயிடம் வந்து, "காகா மஹாராஜூக்கு நாளை பிட்சை உங்கள் வீட்டில்தான்"  என்று சொல்லிச் சென்றான்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத ஸாதே கொண்ட ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

ஸாதே, உடனடியாக மளமளவென்று காய்கறிகள், அரிசி, மளிகை, வெண்ணெய், நெய், பூ, பழம், தாம்பூலம் என விருந்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை தடபுடலாக செய்துமுடித்தார்.

மறுநாள்,  பிட்சை முடிந்து காகா மஹாராஜ் ஓய்வாக இருக்கும்போது, அவரிடம் ஸாதே மிகவும் பவ்யமாக,  "மஹாராஜ் மன்னிக்கவும்!  முதலில் பிட்சைக்கு அழைத்த போது மறுத்தீர்கள்!  அப்புறம் தங்களை ஒப்புக் கொள்ளச் செய்தது எதுவோ?" என்று வினவினார்.

அதற்கு காகாமஹாராஜ் பலத்த சிரிப்புடன், "ஒப்புக் கொள்ளச் செய்தது எது என்று கேட்காதே!  எவர் என்று கேள்!  இதோ உன் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறாயே! இந்த, இந்த சாயிதான் என்னைக் குடைந்து தள்ளிவிட்டார்.  தன் பக்தர்கள் வருத்தப்பட அவர் தாங்கமாட்டாரே!" என்று ஸாதேயின் வீட்டில் மாட்டியிருந்த பாபாவின் படத்தைக் காண்பித்து புன்னகைத்தார்.

Monday 8 July 2019

உன் இடத்தில் எனக்கு ஒரு கோவில் எழுப்பு ! இனிமேல் இங்கு வராதே !



மும்பைக்கருகில் அக்ரூல் என்னுமிடத்தில் வசித்த திரு.கேசவ்பிரதான் என்பவர் 1916-ல் தன் நண்பரோடு ஷீரடிக்கு பாபாவைத் தரிசிக்க வந்தார்.  அவர் பாபாவிடம், "பாபா! என்னிடம் அன்பு கொண்ட எல்லோரும் என் குழந்தைகளே என்கிறீர்கள்!  அப்படியானால் ஏன் நீங்கள் அக்ரூலுக்கு வரக்கூடாது?"  என்று கேட்டார்.

பாபா அவரிடம் தன் படம் ஒன்றைக் கொடுத்து,  "உன் இடத்தில் எனக்கு ஒரு கோவில் எழுப்பு !  இனிமேல் இங்கு வராதே !"  என்றார்.  பாபாவின் உத்தரவுக்கு உட்பட்டு , கேசவ்பிரதான் தனது சொந்த ஊரான அக்ரூலில் பாபாவுக்கு கோவில் கட்டினார்.  அந்த கோவிலில் பாபாவின் தரிசனம் வேண்டி வந்தவர்கள் பலரும் "கோவிலின் எல்லையில் பாபா சகஜமாக நடமாடுவதைப் பார்த்ததாகக் கூறினார்கள்" 

1940-ல் கேசவ் பிரதானின் காலம் முடிந்தது.  பாபா ஆலயத்தைப் புதுப்பிக்க குப்தா,  நாராயண் புரோஹித், தாபோல்கரின் மகன் ஏ.ஆர்.வேல்வால்கர் போன்ற பக்தர்கள் முயன்றனர்.  ஆனால் அதற்கான போதிய நிதி வசூலாகவில்லை. 

நிதி வசூலுக்கு வேறுவித முயற்சியாக,  கோவிலில் ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சப்தாக பாராயணம் செய்யப்பட்டது.  பாராயணத்தின் நான்காவது நாள் நாராயண் புரோஹித் கனவில் பாபா தோன்றி,  "என்னுடைய தூனி எங்கே?  தூனி இல்லாத ஆலயத்துக்கு எப்படி வசூலாகும்?" என்று பாபா கோபமாகக் கேட்டதாகவும், அதே சினத்துடன் அவர் மீது கற்களையும் வீசி எறிந்ததாகவும் நாராயண் புரோஹித் கூறினார்.

உடனடியாக  மற்ற கோவில் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து அனுமதி பெற்று ,  கோவில் வளாகத்திலேயே 8"*4" சதுர அடிப்பரப்பில் தூனிக்கான கட்டிடம் எழுப்பி,  7-4-1949ல் காலை பத்து மணி சுபமுகூர்த்த வேளையில் தாபோல்கரின் மகன் ஏ.ஆர்.வால்வேல்கர் தூனியை ஏற்றினார்.

தூனியை நிறுவிய மறுநாள் அதிகாலை சுமார் மூன்று மணியளவில், "பாபா கோவிலின் கதவைத் திறந்து உள்ளே சென்று மீண்டும் கதவை மூடிக்கொண்டதைக் கண்கூடாகப் பார்த்ததாக" அந்த ஊர் மக்கள் பலரும் ஆச்சர்யத்தோடு கூறினர்.

Saturday 6 July 2019

பாபாவின் உபதேசம்








ஷீரடியில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம்.  அன்றைய தினம் மசூதியில் பாபாவைத் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டமும் அதிகமாயிருக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ஹேமத்பாந்த் பாபாவின் முன்னால் அமர்ந்து கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.  பாபாவின் இடதுபுறம் ஷாமாவும்,  வலதுபுறம் வாமன்ராவும் அமர்ந்திருந்தனர்.

பாபா சிரித்தபடி, "ஷாமா!  ஹேமத்தின் கோட்டு மடிப்பில் சில நிலக்கடலைப் பருப்புகள் இருக்கின்றன பார்!" என்றார்.

உடனே  ஹேமத்பாந்த் தன்னுடைய கோட்டை உதறிவிட, அதிலிருந்து நிலக்கடலைப் பருப்புகள் நாலாபுறமும் சிதறி ஓடின.

"என் கோட்டு மடிப்பில் கடலைப்பருப்பு எப்படி வந்தது?  யார் போட்டது?"  என ஆச்சர்யத்தோடு கேட்டார் ஹேமத்.

"இது என்ன புதுமை?  சந்தைக்குப் போய் நீயே கடலைப்பருப்பு வாங்கித் தின்றிருப்பாய் ! இதிலிருந்து தனியாகத் தின்னும் பழக்கம் உனக்கிருப்பது இன்று வெளிப்பட்டது" என்றார் பாபா.

"பாபா !  நான் இதுவரை சந்தைக்குப் போனதும் இல்லை, போகவும் இல்லை.  கடலைப்பருப்பு வாங்கித் தின்னவும் இல்லை.  அப்படியிருக்க,  என் மீது இப்படி பழி போடுகிறீர்களே பாபா?"  என்று வருத்தத்துடன் கேட்டார் ஹேமத்பாந்த்.

அதற்கு பாபா, "அப்படியானால், கடலைப்பருப்பு கால் முளைத்து வந்ததா?  இன்றில்லாவிடில் நேற்று இது நடந்திருக்கலாம்!  யாராவது ஒருவர் தின்னும்போது உங்களுக்கும் நாலு கடலை கொடுத்திருக்கலாம்!" என்றார்.

மேலும் பாபா கூறும்போது,  "இங்கு பலபேர்,  ஆத்மாவில் கடவுள் இருப்பதாக வெளியில் டம்பமாகச் சொல்லிக் கொள்கிறார்கள் !  ஆனால் நம்புவதில்லை!  நம்பியிருந்தால் எதையும் உண்பதற்கு முன் கடவுளுக்கு ஆத்ம நிவேதனம் செய்யத் தவறமாட்டார்களே !  அப்படி ஆத்ம நிவேதனம் செய்யும் பழக்கம் இருந்தால்,  இது தெய்வம் சாப்பிடுவதற்கு உகந்ததா?  புனிதமானதா? என்று ஒருநிமிடம் யோசித்தாலும் போதும்,  கண்ட இடத்தில் கண்டதையும்,  கடவுளுக்கு படைக்கத் தகாததையும் வாங்கிச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ள மாட்டார்களே !. அப்படியிருந்துவிட்டாலே அவருக்கு தாமஸகுணம் மறைந்து சத்வகுணம் அதிகமாகும்" என்று ஹேமத்தைக் காரணமாக வைத்து பாபா இந்த உபதேசம் செய்ததாக மசூதியில் இருந்த மற்றவர்கள் கருதினார்கள்.

Wednesday 3 July 2019

வைத்தியருக்கெல்லாம் வைத்தியர் நமது பாபா


ஷாமாவின் தம்பியான பாவாஜி சாவூல்கிணற்றுக்கு அருகில் வசித்து வந்தார்.  பாவாஜியின் மனைவிக்கு அடிவயிற்றில் இரண்டு கட்டிகள் இருந்தது. அதனால் அடிக்கடி காய்ச்சலும், வாந்தி பேதியும் ஏற்பட்டது.

அந்த கட்டியின் வலி தாளாமல் பாவாஜியின் மனைவி துடிதுடித்து தினமும் தனது கணவரிடம் அழுது புலம்பினாள்.  இந்த வேதனையைப் பொறுக்க முடியாத பாவாஜி ஷீர்டிக்கு வந்து, தனது அண்ணன் ஷாமாவிடம் தனது மனைவிபடும் துன்பத்தை பற்றிக் கூறி உதவும்படி வேண்டினார்.

ஷாமா அவரை உடனடியாக மசூதிக்கு அழைத்துச் சென்றார்.  அங்கே பாபாவை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கச் சொன்னார்.  அப்போது ஷாமா பாபாவிடம்,  தனது தம்பி மனைவியின் துயரத்தை எடுத்துக் கூறி, "பாபா!  தாங்களே வைத்தியருக்கெல்லாம் வைத்தியர் ! தாங்களே இவர்களைக் காப்பாற்ற வேண்டும் !"  என்று கூறி,  தற்போதைக்கு தனது தம்பியுடன் ஊருக்கு போகவும் அனுமதி கேட்டார்.

பாபா ஷாமாவிடம் உதியைக் கொடுத்து ,  'இந்தா! இந்த உதியை கட்டிகளின் மீது பூசச் சொல்!  கொஞ்சத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் குடிக்க வை!  இந்தப் பின்னிரவு நேரத்தில் நீ போக வேண்டாம்.  காலையில் போய் பார்த்துவிட்டு உடனே திரும்பி விடு!" என்றார். 

பாபாவிடமிருந்து உதியைப் பெற்றுக் கொண்ட ஷாமாவின் தம்பி நேராக தனது வீட்டிற்கு சென்றார்.  அங்கு தனது மனைவிக்கு கட்டிகள் இருந்த இடத்தில் உதியைப் பூசிவிட்டு, கொஞ்சம் உதியை தண்ணீரிலும் கலந்து கொடுத்தார்.  அடுத்த நிமிடமே அவளுக்கு வலி குறைந்து வியர்த்துக் கொட்டி ஜுரம் இறங்கியது.  தூக்கமும் வந்தது.  நன்றாக தூங்கி காலையில் எழுந்து பார்த்தால்,  வயிற்றுக்கடியிலிருந்த கட்டியைக் காணவில்லை.  வாந்தி பேதியும் நின்றிருந்தது. பாவாஜியின் மனைவி பாபாவின் லீலையை எண்ணி வியந்தார்.

காலை நேரம் பசித்ததால் எழுந்து டீ போடத் துவங்கினாள்.  அந்த நேரம் ஷாமா அங்கு வந்தார்.  நேற்றிரவு முழுவதும் உடம்பு சரியில்லாமல் இருந்த பெண் சுறுசுறுப்பாக டீ போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த ஷாமா அதிசயித்தார். "காலையில் போய் பார்த்துவிட்டு உடனே திரும்பிவிடு!" என்ற "பாபாவின் வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை"  என்று எண்ணி புல்லரித்து கண் கலங்கி நின்றார்.

Monday 1 July 2019

பாபா உதியின் மகிமை


தொடர்புடைய படம்

கர்னூல் மாவட்டத்திலுள்ள தோன் என்ற ஊரைச் சேர்ந்தவர் திரு.எம்.கே. ஆனந்த வெங்கடேஸ்வரலு (ஆனந்த்), திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படித்துக் கொண்டிருந்தார்.  இவருக்கு மூன்று சகோதரர்கள்.  அவரது மூன்றாவது சகோதரர் சேஷுமணிக்கு பிறந்த மூன்றாவது மாதத்தில் இளம்பிள்ளைவாதம் நோய் ஏற்பட்டது.  அதனால், சேஷுமணியின் இடதுபக்க உறுப்புகள் செயலிழந்து போயின.  பத்து வயதாகியும் சேஷுமணியால் நிற்கக் கூட முடியவில்லை.

வித்யா நகரில் சாயி பக்தர் ஸ்ரீபரத்வாஜா வந்திருந்ததாக கேள்விப்பட்டு,  அங்கே நடக்கும் வியாழக்கிழமை சாயிபஜனையில் கலந்து கொள்ள நண்பருடன் சென்றார். அந்த சமயம் ஹரிஹரைச் சேர்ந்த ஸ்ரீசமர்த்த நாராயண மகராஜூம் அங்கு வந்திருந்தார்.

ஆனந்த வெங்கடேஸ்வரலு,  தன் தம்பியின் நிலைமையைப் பற்றி அவர்களிடம் வருத்தத்துடன் கூறி காலில் விழுந்து வணங்கினார்.

"ஹனுமான் சாலீஸாவைப் படித்தபடி இந்த விபூதியை உன் தம்பியின் உடலில் தடவு.  குணமாகிவிடும் !" என்று விபூதி அளித்தார் ஸ்ரீசமர்த்த நாராயண மகராஜ். 

"அந்த சாயிபாபாவே இவரின் ரூபத்திலிருந்து விபூதி அளிக்கிறார்! நம்பிக்கையுடன்  பெற்றுக்கொள்!  மற்றதை பாபா பார்த்துக் கொள்வார்!"  என்றார் பரத்வாஜா.

தன் இரண்டாவது சகோதரர் மூலமாக அந்த சக்தி வாய்ந்த விபூதியை வீட்டிற்கு அனுப்பி விபரத்தை சொல்லி அனுப்பினார். அவரின் ஊரோ ஒரு குக்கிராமம், அவர்கள் வீட்டிலோ "ஹனுமான் சாலீஸா" இல்லை.  அதைப் படிக்காமல் விபூதியை தடவக்கூடாது என்று நினைத்து, வீட்டில் உள்ளவர்கள் அந்த விபூதி பொட்டலத்தைப் பிரிக்கவே இல்லை.  அப்படியே சேஷுமணியின் தலையணைக்கடியில் வைத்துவிட்டனர்.

மறுநாள் ஆனந்த வெங்கடேஸ்வரலு கனவில் பாபா தோன்றி , தன்னைச் சுற்றி சூழ்ந்திருந்த பக்தர்களிடம் "இவனை நான் நடக்க வைத்தேன்  !  ஆனால் இன்னும் இவன் நம்பவில்லை!"  என்று ஆனந்தைச் சுட்டிக் காட்டினார்.  ஆனந்துக்கு எதுவும் புரியாமல் கனவிலிருந்து விடுபட்டார்.

அதற்கடுத்த வாரம் ஊருக்குப் போகும்போது தன் சகோதரன் சேஷுமணி நடந்து கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தோடு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.  அப்போதுதான் தான் கண்ட கனவுக்குப் பொருள் புரிந்தது.   "தடவாவிட்டாலும் தலையணைக்கடியிலிருந்த சாயியின் விபூதியே நடக்கும் ஆற்றலைத் தந்திருந்ததை நினைத்து வியப்புற்றார்."