Tuesday 30 July 2019

உங்களுக்கு நலம் உண்டாகட்டும்


பாபா, தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவேண்டும்? [உறவினர்களின் பிரிவு, இழப்பு போன்றவை]

  உமக்கு நெருக்கமானவர்களின் நலனை எண்ணிக் கொண்டு அதன் பொருட்டு நீர் இங்கு வருகிறீரென்றால், அது தவறு. இவற்றிற்காக நீர் எம்மிடம் வரவேண்டியத்தில்லை. இவை என் சக்திக்கு உட்பட்டவை அல்ல.
இவை (குழந்தை பிறப்பது, உறவினர் இறப்பது போன்றவை) ஊழ்வினையைப் பொருத்தது. தேவாதி தேவனானவரும், உலகையே படைத்தவருமான,
பரமேச்வரனால் கூட இவற்றை மாற்றிவிட முடியாது. அவரால் சூரியனையோ சந்திரனையோ நோக்கி, 'வழக்கமாக உதிக்கும் இடத்திலிருந்து இரண்டு கஜம் தள்ளி உதிப்பாய்' எனக் கூற இயலுமா? இயலாது, ஏனெனில் அவரால் முடியாதது மட்டுமின்றி, அவர் அப்படி செய்யவும் மாட்டார். அது  ஒழுங்கின்மை, குழப்பம் விளைவிக்கும்.

அப்படி என்றால், ஒருவரிடம் "உனக்கு குழந்தை பிறக்கும்" என தாங்கள் கூறுகிறீர்கள், அவருக்கு குழந்தை பிறக்கிறது. மற்றொருவரிடம் "உனக்கு வேலை கிடைக்கும்" என சொல்லுகிறீர்கள், அவருக்கு வேலை 
கிடைக்கிறது. இவை எல்லாம் தங்களுடைய அற்புதங்கள் அல்லவா?

இல்லை, நானா. நான் எந்த சமத்காரமும் செய்வதில்லை. கிராமத்து ஜோதிடர்கள் சில தினங்கள் முன்னதாகவே பின்னர் நடக்கப் போவதைக் கூறுகிறார்கள். அவற்றுள் சில பலிக்கின்றன. நான் அவர்களை விட எதிர்காலத்தை தீர்க்கமாகப் பார்க்கிறேன். நான் கூறுவதும் நடக்கிறது. என் வழியும் ஒருவகை ஜோதிடத்தைப் போன்றதே. உங்களுக்கெல்லாம் இது புரிவதில்லை. உங்களுக்கு, என் சொற்கள் அற்புதங்களாகத் தோன்றுகின்றன;
ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தை அறியமாட்டீர்கள். ஆகையால் நிகழ்ச்சிகளை  நீங்கள் எமது அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தியாக முடிவு செய்து, எம்மிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுகிறீர்கள். பதிலுக்கு நான் உங்கள் பக்தியை இறைவனிடம் திருப்பி உங்களுக்கு நலம் உண்டாகச் செய்கிறேன். 

No comments:

Post a Comment